LOADING

Type to search

இந்திய அரசியல்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை பலிவாங்கிய கோர விபத்தில் 11 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்

Share

வேன் மீது கார் மோதி தேவகோட்டை அருகே கோர விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வேனில் சுற்றுலா வந்திருந்த மலேசிய பயணிகள் 10 பேர் உட்பட 11 பேர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்திருந்த 12 பேர் கொண்ட குழுவினர் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு வேனில் சென்றுக் கொண்டிருந்தனர். இவர்களது வேனை மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் கந்தையா (40) என்பவர் ஓட்டி சென்றார். அதேபோல், தஞ்சாவூரில் டீக்கடை நடத்தி வந்த பவுல் டேனியல் (38), அவரது மகள்கள் சூசன் ரெகுமா (10), ஹெலன் சாமா (7), சித்தப்பா மைக்கேல் (63) ஆகியோர் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துக் கொள்வதற்காக காரில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆண்டாஊரணிக்கு வந்தனர்.

காரை பவுல் டேனியல் ஓட்டினார். தேவகோட்டை அருகே மார்க்கண்டேயன்பட்டி விலக்கு என்ற இடத்தில் மதியம் 12.30 மணிக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த டெம்போ வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேர், வேன் ஓட்டுநர் மற்றும் மலேசிய சுற்றுலா பயணிகள் 10 பேர் காயமடைந்தனர். கிராம மக்கள், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி காரில் பயணித்த பவுல் டேனியல், சூசன் ரெகுமா, ஹெலன் சாமா, மைக்கேல் ஆகிய நால்வரும் உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.